Tuesday, 7 August 2012

ஜீனோம்- முதல் அத்தியாயம்


புத்தகத்தின் முதல் அத்தியாயம் இங்கே தொடங்குகிறது , தவறுகளை மன்னித்து மறக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அத்தியாயம்-  ஒன்று
                 மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று கவிஞர் பாடியிருக்கிறார். தெய்வத்தின் மற்ற செயல்களை அவன் மேற் கொள்கிறானோ இல்லையோசந்தேகம். ஆனால், சிருஷ்டியை இந்த நூற்றாண்டில் பறித்துக் கொண்டு விடுவான் போலத் தோன்றுகிறது. அதற்குரிய எச்சரிக்கைகள் அண்மையில் முடிந்த ஒரு அறிவியல் சாதனையால் தோன்றியுள்ளன.
                குடென்பர்கின் அச்சியந்திரம், தனிமங்களை வகைப்படுத்திய மெண்டலேவின் பீரியாடிக் டேபிள், மனிதன் சந்திரனில் கால் பதித்தது போன்ற சாதனைகளுக்கு ஈடானதாகச் சொல்கிற இது என்ன?
                 நான்கு அட்சரங்களால் முந்நூறு கோடி முரை எழுதப்பட்ட ஒரு புத்தகம் - வாழ்வெனும் புத்தகம். இதை ஏறத்தாழ முழுவதும் படித்திருக்கிறார்கள். உயிரின் ரகசியத்தைக் கண்டுகொள்ளும் இந்த திட்டம் 1990 இல் துவங்கியது.
                'தி ஹ்யூமன் ஜீனோம் ப்ராஜெக்ட்' என்ற பெயரில் உலகின் முன்னேற்ற நாடுகளின் விஞ்ஞானிகள் ஒன்றுகூடி ஏறத்தாழ இருநூற்று ஐம்பது மில்லியன் டாலர் (மில்லியன் என்பது பத்து லட்சம், டாலர் என்பது 45 ரூபாய்) செலவழித்த இந்த சாதனை நிறைவு பெறும் நிலையில் உள்ளது !
                  மனித உடலின் ஒவ்வொரு அங்கமும் எப்படி உருவாகிறது என்பது அவனுடைய செல் என்னும் உயிரணுவில் செய்தியாக எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. பேப்பர் பென்சிலால் அல்ல. க்ரோமோசோம் என்னும் மிக நீண்ட கூட்டணுவின் கட்டமைப்பில் அந்த ரகசியம் பொதிந்திருக்கிறது. அதை ஒரு மாதிரி படித்து விட்டார்கள்.இது ஒரு ஆரம்பம்தான்.
                   இந்தக் கண்டுபிடிப்பின் சாத்தியங்கள் பல. வியாதிகள் வராமல் இருக்கவும் தடுக்கவும் முதலில் பயன்படப் போகிறது. புற்று நோயிலிருந்து சர்க்கரை வியாதி வரை, வயிற்றுப் போக்கிலிருந்து வயசாகும் காரணங்கள் வரை எல்லாவற்றையும் திருத்தும்நிவர்த்திக்கும் சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளன.
                    சில பயங்களும் புறப்பட்டுள்ளன. ஜீனை வைத்து மனிதனை பாகுபடுத்துவது முதல் பயம். வியாதிகள் வரும் என முன்பே அறிவதால் ஒரு ஆளை இன்சூர் பண்ணவோ வேலைக்கு வைத்துக் கொள்ளவோ தயக்கங்கள். கருவிலேயே பிறக்கப் போகும் குழந்தையின் எதிர்கால வியாதிகள் தெரிவதால் குழந்தை பெற்றுக் கொண்டதற்கே குற்ற உணர்ச்சி ஏற்படும் சாத்தியங்கள் உண்டாகும். (நான் அப்போவே சொன்னேனில்லஇந்த குழந்டஹிக்கு ஹேமோக்ரோ மோடாசிஸ் வரும்னு…)
                     அதற்கெல்லாம் மேலே மனித வாழ்க்கையின் மிகப்பெரிய சஸ்பென்ஸான மரண தேதியையும் கூடத் தெரிந்து கொள்கிற சாத்தியங்கள் கைகூடும். ஆயிரம் வருஷத்தையும் தாண்டி வாழ்கிற அற்புதங்கள் நடந்தேறும். மனிதனின் சராசரி ஆயுள் பல நூறு ஆண்டுகள் நீடிக்கிறபோது சந்தோஷங்களுக்கு இணையான சங்கடங்கள் என்னென்ன வரும் என்று கற்பனை செய்ய முடிகிறதா?
                      இருந்தும் இந்தச் சாதனை, மனித சரித்திரத்தில் ஒரு முக்கியமான கட்டம் என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை.
                      மொத்தம் நூற்றிப்பத்து தேர்ந்த வ்ஞ்ஞானிகள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆரு நாடுகளில் பதினாறு ஆரய்ச்சி சாலைகளில் (பெரும்பாலும் பல்கலை கழகங்களில்) இதில் வேலை நடந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் உல்ல டி.என்.ஏ என்கிற மரபணுவின் ரசாயனப் பொருள்களின் வரிசை அமைப்பை அறிந்து கொண்டிருக்கிறார்கள்.
                       அரசாங்கத்துடன் செலரா போன்ற சில தனியார் நிறுவன் ஆராய்ச்ச்யாளர்களும் பந்தயத்தில் ஈடுபட்டதில், ஆராய்ச்சி துரிதப்பட்டு இப்போது ஒவ்வொரு நிமிஷத்துக்கும் 1600 எழுத்துக்களைப் படிக்கும் வெகத்துக்கு வந்துவிட்டர்கள். படித்ததை உடனே உலகுக்குச் சொல்லிவிடுகிறார்கள். நீங்கள்கூட இன்டர்நெட்டில் அதைப் படிக்கலாம். அவ்வளவு சுவாரசியமாக இருக்காது. காரணம் திரும்பத் திரும்ப நாலு எழுத்துக்கள் தான் இம்மொழிக்கு. இந்த ஜூன் மாத இறுதியில் ஏறக்குறைய படித்து முடித்து அறிவித்துவிட்டார்கள்.
                         உயிரின் அடையாள ரகசியங்களையும்,நாம் யார் என்பதையும் அறிந்து கொள்ளும் பாதையில் முதல் காலடி இது. இந்த நூற்றாண்டை ஜீனோம் நூற்றாண்டு என்று நம் பிள்ளாஇகள் அழைக்கப் போகிறார்கள். நம்மில் பாதிப்பேர் கொஞ்சம் அவசரப் பட்டு பிறந்து விட்டோம். வரும் ஆண்டுகளில் டாக்டர்கள் உங்கள் ரத்தத்தையோ, எச்சிலையோ ஒரு துளி எடுத்து, அதை பையோசிப் என்னும் புதிய சில்லில் வைத்து, பத்தாயிரம் வியாதிகளில் உங்களுக்கு எதுவருவதற்கு சான்ஸ் அதிகம்? கான்சர் வருமா? லுக்கிமியா வருமா? அல்ஸைமர் வருமா? டயபிட்டீஸ் வருமா? என்பதை அறிந்து சொல்ல முடியும். இப்போதே இந்த வகை சிப்களை அமெரிக்க சிலிக்கன் பள்ளத்தாக்கில் சில கம்பெனிகள் செய்கிறார்கள்.
                           ஒரு புண் எப்படி ஆறுகிரது? ஒரு குழந்தையின் விரல் எப்போது வளருகிறது? ஒரு தசை எப்போது சுருங்குகிறது? ஒரு பாடல் எப்போது மனதில் பதிகிறது? இது போன்றத்ற்கெல்லாம் காரணமான ஜெனட்டிக் அதிசியங்களைக் கண்டுகொள்ள முடியும்.
                           வாழ்க்கையின் புத்தகத்தைப் படித்தால் எப்படியிருக்கும் ?
                         அதிக சுவாரசியமில்லாத ATGCCCGCGGCTCCTCC இப்படியே முந்நூறு கோடி. இதில் தலைகால் புரிந்துகொண்டு என்னத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று நீங்கள் வியக்கலாம். இதில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு கூட்டணுவைக் குறிக்கிறது.
                        அடினைன், தையோமைன், சைட்டோசைன், குவானைன் இவ்வளவுதான், அடுத்த முறை யாராவது உங்களிடம் சண்டை போட்டால், நீயும் ஏடிஸிஜி. நானும் ஏடிஸிஜி. நமக்குள்ளா என்ன சச்சரவு அண்ணாச்சி! என்று உலகத்துப் பிரஜை யாரிடமும் சொல்லலாம்.
                         உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சருமம், முடி தசை, வயிறு, ஈரல் எல்லாமே இவைகளால் ஆனவை தான். (இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் தவிர) ஒரு இனத்தின் மொத்த டி.என்.-க்களின் தொகுப்பைத்தான் ஜீனோம் என்கிறார்கள்.
                         இந்த ஜீன் என்ன செய்கிறது? சிம்பிள் . புரதங்களை உண்டு பண்ணுகிறது. நான்கெழுத்துக்கள் மட்டுமே திரும்பத் திரும்பக் கொண்ட இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு சின்னச்சின்ன மூன்றெழுத்து வார்த்தையும் அமினோ அமிலம் என்பதுடனொட்டிக் கொள்கிறது. இவ்வாறான அமினோ அமிலங்களின் சரம்தான் புரதங்கள் - புரோட்டின். புரோட்டின்தான் நம் உயிர் மற்றும் நம் எல்லாமே. என் உயிரே, என் ஆருயிரே! என்று புரோட்டினைத்தான் கவிதை பாடலாம். நாம் உயிர் வாழக் காரணங்கள் இவைதான்.
                         சாப்பிட்டதை ஜீரணிப்பதிலிருந்து பெண் பூபடையும் வரை எல்லாமே புரோட்டின் ரசாயன ரகளைதான். ஜீன் என்பது ஒரு பாடநூல். சரியாகச் சொன்னால் பாட நூலேணி. அதன் படிகளில் புரோட்டினை எப்படி உண்டக்குவது என்பதற்கான செயல்முறைகள் உள்ளன. மனிதருக்கு அம்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை ஜீன் இருக்குமென்று சொல்லுகிறார்கள். மனிதர்களிடையே ஜீன்களில் 99.9வி. ஒரே மாதிரிதான். மிச்சமிருக்கும் 0.1விழுக்காடுதான் உங்களையும், என்னையும், கிளிண்ட்டனையும், வாஜ்பாயையும், ரஹ்மானையும், ரம்பாவையும் வேறுபடுத்துகிறது.
                           உடம்பின் செல்லின், ஜீனின், ஆயிரத்தில் ஒரு பகுதியில்தான் நாம் வேறுபடுகிறோம். இதில் எத்தனை சாதிகள், குணங்கள், கோபங்கள், திறமைகள், மடமைகள்.
                           சரி  உயிர் என்றால் என்ன என்பதை அறிய உலகில் முதல் உயிர் எப்படித்தோன்றியது என்பதை அடுத்த அத்தியாய்த்தில் பார்க்கலாம்

ரெஸ்ட் எடுங்க…!!!  


 

Monday, 6 August 2012

'ஜீனோம் -சுஜாதா' ஒரு அறிமுகம்..!


          நான் முந்தைய பதிவில் கூறியதைப் போல அடுத்த பதிவு எதனைப் பற்றி எழுதவேண்டும் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் வீட்டில் சும்மா அமர்ந்திருந்தபோது என்றோ வாங்கி வைத்த 'ஜீனோம்' புத்தகம் என் கண்ணில் பட்டது. நான் சுஜாதா அவர்களின் தீவிர ரசிகன், அவர் எழுதிய புத்தகங்களில் சொற்ப எண்ணிக்கையே என் கையில் உள்ளன. சுஜாதா எழுதிய பல நாவல்கள் என்னிடம் இருக்கின்றன. அவர் எழுதிய அறிவியல் சார்ந்த கட்டுரை புத்தகங்கள் 20-க்கும் மேற்பட்டவை இருக்கின்றனவாம். ஆனால் என்னிடம் இருக்கும் அறிவியல் சார்ந்த கட்டுரைத் தொகுப்பு இது ஒன்று மட்டுமே. அறிவியலை, வாசிக்கும் வாசகனுக்கு எளிமையாக தமிழ் வார்த்தைகளில் கொண்டு சேர்ப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.
உதாரணம்

மனிதன் என்பவன் கட்டடம்... அறைகள் அவன் செல்கள்...
அலமாரி ஒரு செல்லின் உட்கரு- அதாவது நியூக்ளியஸ்...
புத்தகம்தான் டி.என்.ஏ... அவ்வளவேதான்...
 
                     இது ஒரு தொடர் பதிவாக வலம் வரும். அந்த புத்தகத்தில் அவர் என்ன கூறியுள்ளாரோ அதனை அப்படியே மாறாமல் அளிக்க முயற்சிக்கிறேன் ( பச்சையா சொல்லனும்னா.. காப்பி பண்ணி போடப் போறேன்..) அந்த புத்தகத்தை நான் வாங்கியதற்கு காரணம் அதன் விலை வெறும் 22.ரூபாய் மட்டுமே. எனவே அதனை புத்தகமாகவே படிக்க விரும்புபவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் புத்தகக் கடையில் வாங்கி படித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இல்லை.. இல்லை.. நான் லோகுவின் ஃப்ளாகில் தான் கொஞ்சம் கொஞ்சமாக படிக்கப் போகிறேன் என்று விரும்பினால் (உங்கள் விதியை யாரால் மாற்ற முடியும்… :P) இந்த தொடர்பதிவினை தொடர்ந்து படிக்கலாம். ஜீனோம் என்ற உயிர் ரகசியத்தைப் பற்றி இதில் சுஜாதா விலாவாரியாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தினை என் தங்கையிடம் அளித்தபோது "இது +2 உயிரியல் புத்தகத்திலேயே வந்துவிட்டது, ஆனால் அதில் இருப்பதை விட அதிகமாகவும் ஒவ்வொரு விஷயத்திற்கும் சுவாரசியமான எடுத்துக்காட்டு கூறி விளக்குவதாலும் படிக்க இனிமையாக இருக்கிறது" என்றாள். ஆகவே ஜீனோம் பற்றி நிரம்ப படித்தவர்கள் இந்த விஷயங்கள் காலம் பின்தங்கி இருப்பதாகக் கருதினால்அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது(ஏன்னா... சரக்கு 2001-ல் வெளிவந்தது...!). நம்ம +2 உயிரியல் புத்தகம் 2007-ல் தான் மாற்றப்பட்டது என நினைக்கிறேன். ஆனால் தலைவர் இதனை 2001-லேயே பிரித்து மேய்ந்து விட்டார். இந்த புத்தகத்தை இணையதளத்தில் பெற இங்கே க்ளிக் செய்யவும். இதோ இப்பதிவின் முடிவினை சுஜாதாவின் முன்னுரையுடன் முடிக்கிறேன்.




முன்னுரை

ஜீனோம் என்னும் இக்கட்டுரைத் தொடர் 'ஜூனியர் விகடன்' இதழில் வெளிவந்தது. அறிவியலை எளிமையாகத் தமிழில் எழுதும் முயற்சியில் என் உற்சாகம் குறைவதே இல்லை.
                   ஆசிரியர் பாலசுப்ரமனியன் அவர்களுக்கும் திருமகள் நிலையத்தாருக்கும் அட்டையை சிறப்பாக வரைந்த திரு.நாணா அவர்களுக்கும் நன்றி

- சுஜாதா             
சுதந்திர தினம்
2001      
  
ரெஸ்ட் எடுங்க...!!

Saturday, 4 August 2012

முதல் பதிவு

அனைவருக்கும் வணக்கம்,
               இந்த ப்ளாகை ஏதோ விளையாட்டாகத் தான் ஆரம்பித்தேன். என் நண்பன் நிவாஸ் ஆரம்பித்த வலைப்பக்கத்தை பார்த்துத் தொடங்கப்பட்ட ஒரு amateur effort தான் இது. எனக்கும் அவனுக்கும் எப்போதுமே ஆரோக்கியமான போட்டி உண்டு(?) . எனக்கு நன்றாக ஓவியம் வரையத் தெரியும் ஆனால் அதனை வெளிப்படுத்தியது அவனுடன் போட்டி போட்டுக்கொண்டு இஸ்க்கூல் இஸ்க்கூலாக ஓவியப் போட்டியில் கலந்து கொண்டதனால் தான். இது போன்ற பல உதாரணங்கள் உண்டு. நான் என் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கையைப் பிசைந்து கொண்டிருந்தபோது "இஞ்ஜினியரிங்க் படிப்பில் சேர்ந்தால் நல்ல காசு பாக்கலாம் மாப்ள...!" என்று என் வாழ்க்கையை நிர்மூலம் ஆக்கியதும் அந்த படுபாவிதான். "ஏரோநாட்டிக்கல் இல்லாட்டி மெக்கட்ரானிக்ஸ் மாரி கோர்ஸ் எடுத்துப் புதுசா படிக்கப் போறேண்டா...!" என்று என் நெஞ்சில் அமிலத்தை விதைத்தான். சரி அம்ம பய சொல்றானேன்னு ஒரு சூப்பர் காலேஜ்(?)ல மெக்கட்ரானிக்ஸ் கோர்ஸ் எடுத்துட்டு வெற்றிகரமா கவுன்சிலிங் போயிட்டு வந்தா "மச்சி நான் "ஈ.சி.ஈ" எடுத்துட்டேண்டா" என்று குண்டைத் தூக்கிப் போட்டவன்.(என்ன சொல்ல வர்ற... அவன் உனக்கு ஃப்ரெண்டா எதிரியா?னு நீங்க கேக்குறது புரியுது). அதற்காக சொல்ல வரவில்லை என் வாழ்க்கையையே மாற்றிவிட்ட நிமிடங்களுக்கு சொந்தக்காரன் தான் இந்த துஷ்ட வேலையில் நான் இறங்கக் காரணமானவன் என்று கூறிக்கொண்டு, இனி நான் எவ்வளவு கேவலமாக பதிவிட்டாலும் அதற்கு முழுமுதற் காரணமும் அந்த மனிதருள் மாணிக்கத்தையே சாரும் எனவும் பதிவு நன்றாக இருந்தால் அது முழுக்க முழுக்க லோகுவையே சாரும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் (ஹீ... ஹீ... ஹீ...) இன்று தொடங்கும் இந்த பதிவுச்சரங்கள் எதைப் பற்றி இருக்கும் என்றால்...
எதைப் பற்றி இருக்கும் என்றால்...
எதைப் பற்றி இருக்கும் என்றால்...
அது அடுத்த பதிவுல தான் எனக்கே தெரியும்...!
(அப்பாடி முதல் பதிவு முடிஞ்சுடுச்சு...!!)


ரெஸ்ட் எடுங்க....!